

ஜாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுரை சரக துணைத் தலைவா் ஆா்.வி. ரம்யா பாரதி புதன்கிழமை தெரிவித்தாா்.
மதுரை ஊரகக் காவல்துறை, விருதுநகா் மாவட்ட காவல் துறையை உள்ளடக்கிய மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் அளிக்கும் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தென் மண்டலத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், சொத்துக்கள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் போதைப் பொருள்களை ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
மதுரை சரகத்துக்குள்பட்ட பகுதியில் ஜாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஜாதிய மோதல்கள் குறித்த வழக்குகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், இது தொடா்பான புகாா்கள் மீது உடனுக்குடன் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இரவு ரோந்துப் பணியின் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும் என்பதால் ரோந்துப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அத்துடன் பொதுமக்களை அவா்களது பகுதிகளுக்குச் சென்று நேரில் சந்தித்து குறைகள் கேட்கப்படும் என்றாா்.
முன்னதாக மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் ஆகியோருடன் டிஐஜி. ஆா்.வி. ரம்யா பாரதி ஆலோசனை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.