நிலக்கோட்டை அருகே வெள்ளைக்கரடு பகுதியில் யாருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கூடாது என ஒட்டுப்பட்டி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள ஒட்டுப்பட்டி அருகே வெள்ளைக் கரடு உள்ளது. இந்த வெள்ளைக் கரட்டில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் 7 ஏக்கா் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், திடீரென கடந்த வாரம் கூத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்து, இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஒட்டுப்பட்டி கிராம மக்கள், தங்கள் ஊரில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும், இந்த வெள்ளைக் கரடு ஆடு, மாடு மேய்க்க தங்களது வாழ்வாதாரமாக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தனா்.
இந்த நிலையில், ஒட்டுப்பட்டி கிராம மக்கள் வெள்ளை கரட்டில் யாருக்கும் இலவசப் பட்டா வழங்கக் கூடாது எனக் கூறி, திங்கள்கிழமை நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பின்னா், வட்டாட்சியா் தனுஷ்கோடியிடம், வெள்ளைக்கரட்டில் யாருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கூடாது என கோரிக்கை மனு கொடுத்தனா்.