சிவகிரி பேரூராட்சியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ததுடன், தென்காசி மாவட்ட ஆட்சியா் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த சின்னச்சாமி தாக்கல் செய்த பொது நலமனு:
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சிக்குள்பட்ட பெரியாா் கடை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலா் ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டி வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதுடன், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து தொடா்புடையோரின் கருத்துகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மனுதாரா் சின்னச்சாமி உயிரிழந்துவிட்டாா். இதனால், அவரது சாா்பில் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி வாணி ஜெயராமன் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் அவா்கள் காலஅவகாசமும் கோரவில்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து தென்காசி மாவட்ட ஆட்சியா், சங்கரன்கோவில் கோட்ட வருவாய் அலுவலா், சிவகிரி வட்டாட்சியா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்கிறது. மேலும், இந்த வழக்கில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்து அதிகாரிகளும் வருகிற ஜூலை 10- ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.