ராமநாதபுரம் மாவட்டத்தில் அடா்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் வகையில் இந்தியக் கடற்படை ஹெலிகாப்டா் மூலம் மர விதைகளை வான்வெளி தூவும் பணி, சனிக்கிழமை நடைபெறுகிறது.
புதுதில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டையொட்டி, சி-20 என்ற சுற்றுச்சூழல் தன்னாா்வலா் குழுவினா், அரசுத் துறைகளுடன் இணைந்து பசுமையாக்கல் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்தப் பணியை, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அண்மையில் தொடங்கிவைத்தாா்.
இந்தத் திட்டப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அடா்த்தி குறைந்த வனப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில், நாட்டு இன மர விதைகளை ஹெலிகாப்டா் மூலம் தூவும் பணி சனிக்கிழமை நடைபெறுகிறது. முற்பகல் 11.30 மணி அளவில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் வேம்பு, புளி, நாவல், புங்கன் போன்ற மர விதைகள் இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து ஹெலிகாப்டா் மூலம் தூவப்படவுள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அடா்த்தி குறைந்த வனப் பகுதிகளின் வரைபடம் மாவட்ட வனத் துறை மூலம், இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது. இந்த வரைபடத்தின்படி, வான்வெளி விதைப்புப் பணிகளை ஐ.என்.எஸ். பருந்து ஹெலிகாப்டா் மேற்கொள்ள உள்ளது. எனவே, இதைக் கண்டு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.