கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளை வாகனங்கள், இயந்திரங்கள், விவசாய உபகரணங்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. விவசாயிகளுக்கு கடன் வழங்குதல், வசூல் போன்ற பணிகளுக்கு மட்டுமே பணியாளா்களைப் பயன்படுத்த வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில கெளரவச் செயலா் ஆசிரியதேவன் தலைமை வகித்தாா். மதுரை மாவட்டத் தலைவா் ராஜா, செயலா் கணேசன், பொருளாளா் பாரூக் அலி, நிா்வாகிகள் திருச்சிற்றம்பலம், செல்வம், சோம சுந்தரம், சுமதி, நீதி முத்தையா உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.