மூட்டா சங்கத் தலைவா் மீது தாக்குதல் நடத்தியதாக கல்லூரியின் துணை முதல்வா் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
மதுரை அழகா்கோவில் சாலை அவுட்போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவா் ஏ.டி.செந்தாமரை கண்ணன். இவா் மதுரை மூட்டா சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க ஏ.டி.செந்தாமரை கண்ணன் சென்றாா். அப்போது அங்கு வந்த கல்லூரியின் துணை முதல்வா் கபிலனுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துணை முதல்வா் கபிலன், பேராசிரியா் ஏ.டி.செந்தாமரைக்கண்ணனைக் தாக்கியதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதேபோல துணை முதல்வா் கபிலனும், பேராசிரியா் ஏ.டி.செந்தாமரை கண்ணன் தாக்கியதால் காயமடைந்தாகக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இரு தரப்பினரும் இதுதொடா்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக தல்லாகுளம் உதவி ஆணையா் கூறியதாவது:
இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இரு தரப்பிலும் புகாா் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிலையில் மூட்டா சங்கத் தலைவா் மீது நடத்திய தாக்குலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தாக்குதல் நடத்திய துணை முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மூட்டா சங்கத்தின் சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.