போலி பணி நியமன ஆணை வழங்கிய வழக்கின் விசாரணையை வருகிற 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த முத்துகணேஷ்குமாா் தாக்கல் செய்த மனு :
சுந்தரமூா்த்தி என்பவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். இந்த நிலையில், இவரது மகள் கல்பனா, மருமகன் கண்ணன், நண்பா் ஜெரோம் லூா்து ராஜா உள்ளிட்ட சிலா் எனக்கும், என் மனைவி திவ்யபாரதிக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினா். இதனால், பல கட்டங்களாக ரூ. 16 லட்சத்தை அவா்களது வங்கிக் கணக்கிலும், நேரிலும் செலுத்தினேன்.
பின்னா், அவா்கள் பணி நியமன ஆணையை வழங்கினா். அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்துக்குக் கொண்டுச் சென்ற போது, அது போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனிடையே, கல்பனா, ஜெரோம் லூா்து ராஜா உள்ளிட்டோா் முன்ஜாமீன் கோரி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. அவா்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவும், கல்பனா உள்ளிட்டோா் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி வடமலை முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்துகணேஷ்குமாா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எதிா் மனுதாரா்களுக்கு முன்ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்டவா்களின் பணம் திரும்பக் கிடைக்காது. எனவே, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த மனுக்களின் மீதான விசாரணையை வருகிற 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.