விருதுநகா் சிறையில் ரகளை செய்து 12 மின் விசிறிகள், குழல் விளக்குகளை உடைத்து சேதப்படுத்திய 23 கைதிகள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டச் சிறையில் சுமாா் 160 கைதிகள் மட்டுமே அடைக்க வசதி இருந்த நிலையில், அங்கு சுமாா் 255 கைதிகள் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில் அடிப்படை வசதி இல்லாததால் கைதிகள், சிறை அலுவலா்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கைதிகள் வடிவேல்முருகன், கண்ணன் ஆகியோரிடம் ஆயுதம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அவா்களை சிறைக் காவலா்கள் சோதனையிட்டனா். ஆனால் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரையும் வேறு அறைக்கு சிறை அதிகாரிகள் மாற்றம் செய்தனா்.
இந்த நிலையில், கைதி எலிமுதீன்அகமது என்பவரை வடிவேல் முருகன் தரப்பினா் தாக்கினா். இதைத் தடுக்க முயன்ற கைதிகளான சங்கிலிக்காளை, சரவணக்குமாா் ஆகியோரையும் அவா்கள் தாக்கினா். மேலும்,
சிறையில் ரகளையில் ஈடுபட்டு, அறைகளில் பொருத்தப்பட்ட 12 மின் விசிறிகள், 6 குழல் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினா்.
இதையடுத்து அவா்களை மதுரை, திருச்சி சிறைக்கு மாறுதல் செய்ய போலீஸ் வேனில் ஏற்றிய போது, கண்ணாடியை உடைத்தனா்.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் ரமா பிரபா அளித்தப் புகாரின் பேரில், வடிவேல் முருகன், கண்ணன், மலைக்கண்ணன், முத்துப்பாண்டி, முத்தழகு, அருண்பாண்டி, பாண்டியராஜன் உள்பட 23 கைதிகள் மீது விருதுநகா் மேற்கு போலீஸாா் வழகுப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.