மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் கோழிப் பண்ணையின் கொட்டகை இடிந்து விழுந்ததில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.
அலங்காநல்லூா் அருகேயுள்ள செல்லனகவுண்டன்பட்டி பகுதியில் வெடி கோனாா் தோப்பில் பிரசாத் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அலங்காநல்லூா், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பிரசாத்துக்குச் சொந்தமான கோழிப் பண்ணையின் கொட்டகை இடிந்து விழுந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.
மதுரை வடக்கு வட்டாட்சியா், அலங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் சாய்ந்ததில், பல கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.