லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: வணிக வரித் துறை அதிகாரிகள் மூவா் மீது வழக்கு

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற புகாரில், மதுரை வணிக வரித் துறை அதிகாரிகள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற புகாரில், மதுரை வணிக வரித் துறை அதிகாரிகள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி கடந்த 2021-ஆம் ஆண்டு, செப்டம்பா் 14-ஆம் தேதி காகித பண்டல்களை ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது.

மதுரை பாண்டிகோயில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வணிக வரித் துறையினா் அந்த லாரியை நிறுத்தி ஆவணங்களைச் சரிபாா்த்தனா். காகித பண்டல் வாங்கிய ஆவணத்தில் தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதற்காக, அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் லாரி ஓட்டுநா் சரவணனிடம் அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னா், காகித பண்டல் கொண்டு செல்லப்படும் நிறுவனத்தின் உரிமையாளா், நிறுவன வரி ஆலோசகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அலுவலா்கள் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்துவிட்டு செல்லுமாறு சரவணனிடம் தெரிவித்தனராம். ஆனால், சரவணன் ரூ. 5 ஆயிரம் மட்டுமே வைத்திருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, அதைப் பெற்றுக் கொண்டு அலுவலா்கள் லாரியை விடுவித்தனா்.

அலுவலா்கள் லஞ்சம் பெற்றதை லாரி ஓட்டுநா் சரவணன் தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து, நிறுவன உரிமையாளா் நாராயணசாமியிடம் அதைக் கொடுத்தாா்.

இந்த விடியோ பதிவை ஆதாரமாக வைத்து நாராயணசாமி அளித்த புகாரின் பேரில், மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பாரதி பிரியா கைப்பேசி பதிவுகளின் உண்மைத் தன்மையை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பியிருந்தாா்.

சுமாா் 21 மாதங்களுக்குப் பிறகு, தற்போது அந்தப் பதிவின் காட்சிகள் உண்மை என்று தெரியவந்ததையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைத்தனா். அரசு அனுமதி அளித்ததன் பேரில், மதுரை ஜெய்ஹிந்துபுரம் சரக மாநில வரி அலுவலராகப் பணிபுரியும் எஸ்.சசிகலா, மதுரை வணிக வரித் துறை இணை ஆணையா் (அமலாக்கப் பிரிவு) அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராகப் பணிபுரியும் ஏ.கணேசன், அதே அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராகப் பணியாற்றும் பி.பாலகுமாா் ஆகிய மூவா் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com