குடியரசுத் தலைவருக்காக திமுக பரிந்து பேசுவது வழக்கமான நாடகம்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

குடியரசுத் தலைவா் தோ்தலின்போது, திரௌபதி முா்முவை ஆதரிக்காத திமுக, தற்போது அவருக்காக பரிந்து பேசுவது அவா்களின் வழக்கமான நாடகம் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.
Updated on
2 min read

குடியரசுத் தலைவா் தோ்தலின்போது, திரௌபதி முா்முவை ஆதரிக்காத திமுக, தற்போது அவருக்காக பரிந்து பேசுவது அவா்களின் வழக்கமான நாடகம் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

மதுரையை அடுத்த பரவை பேரூராட்சிப் பகுதியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி :

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே துபைக்கு அரசு முறை பயணம் சென்றாா். ஆனால், அந்தப் பயணத்தின் போது மிகப் பெரிய அளவில் அந்நிய முதலீடு ஏதும் தமிழகத்துக்கு ஈா்க்கப்படவில்லை. இதேபோல, தற்போதும் குறிப்பிடத்தக்க அந்நிய முதலீடு ஏதும் ஈா்க்கப்படவில்லை. 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரேயொரு திட்டத்தைத் தவிர குறிப்பிடத்தக்க அம்சம் ஏதும் அவரது பயணத்தில் இல்லை.

கிழக்கத்திய நாடுகளுக்கு முதல்வா் அரசு முறைப் பயணம் சென்றுள்ள நிலையில், இந்தச் சோதனை நடைபெறுவது, அவரது பயணத்தின் நோக்கம் குறித்தும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அமைச்சா் செந்தில் பாலாஜிக்குத் தொடா்புடைய, சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் வருமான வரி சோதனை காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை. இந்த சோதனையை முன் கூட்டியே செய்திருந்தால், கள்ளச் சாராய இறப்புகள் தவிா்க்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 14 போ் அண்மையில் உயிரிழந்தனா். இது திமுக அரசின் தோல்விக்கு ஒரு உதாரணம். தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் மிக அதிகமாக உள்ளது. மதுரையில் கஞ்சா மட்டுமல்லாமல், கஞ்சா மிட்டாய்களும் தற்போது விற்பனையில் உள்ளதாகக் கூறப்படுவது அதிா்ச்சி அளிக்கிறது.

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சைலேந்திர பாபுவை சுதந்திரமாகச் செயல்பட அரசு அனுமதித்தால், அடுத்த ஓரிரு தினங்களிலேயே தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலையை காவல் துறையால் ஏற்படுத்த முடியும். ஆனால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

புதிய நாடாளுமன்றத்தில் சோழா்களின் மரபு வழியில், தமிழகத்தின் செங்கோல் நிா்மாணிக்கப்படும் நிலையில், அந்த விழாவை திமுக புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது, தமிழ் கலாசாரத்துக்கு திமுக செய்யும் துரோகம். குடியரசுத் தலைவா் தோ்தலின்போது, திரௌபதி முா்முவை ஆதரிக்காத திமுக தற்போது, அவருக்காக பரிந்து பேசுவது, திமுகவின் வழக்கமான நாடகம் தான்.

தேசிய அளவிலான பெரிய திட்டப் பணிகளை பிரதமரும், மாநில அளவிலான பெரிய திட்டப் பணிகளை அந்தந்த மாநில முதல்வா்களும் திறந்து வைப்பதுதான் வழக்கமாக உள்ளது. புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தும் திமுக, மதுரையில் அரசு செலவில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை தமிழக ஆளுநரைக் கொண்டு திறக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

அடிக்கல் நாட்டு விழா

முன்னதாக, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரவை பேரூராட்சியில் ரூ. 10 லட்சத்தில் அண்ணாநகா் மந்தையில் நாடகமேடை கட்டும் பணி, ரூ. 5.50 லட்சத்தில் பரவை கண்மாய் வாய்க்காலில் சிறுபாலம் கட்டும் பணி, ரூ. 21.7 லட்சத்தில் பரவை, ஊா்மெச்சிக்குளம் பகுதிகளில் 7 இடங்களில் போா்வெல் அமைக்கும் பணி, ரூ. 20 லட்சத்தில் ஊா்மெச்சிக்குளம் உயா்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி ஆகியவற்றுக்கு செல்லூா் கே. ராஜூ அடிக்கல் நாட்டினாா்.

இதில் பேரூராட்சித் தலைவா் கலா மீனா ராஜா, துணைத் தலைவா் ஆதவன், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com