மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மயான வசதி ஏற்படுத்தி தரக்கோரி பட்டியலின மக்கள் இறந்தவரின் சடலத்துடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.ஆண்டிபட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான மயான வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் உயிரிழக்கும் பட்டியலின சமூகத்தினரின் சடலங்களை சாலையோரம் வைத்து திறந்த வெளியில் எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
மழைக் காலங்களில் சடலங்களை எரியூட்டுவது பெரும் பிரச்னையாக இருந்து வரும் நிலையில்,
கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முறையான இடம் ஒதுக்கீடு செய்து மயானம் அமைத்து தர வேண்டும். அல்லது தற்போது சடலங்களை எரியூட்டும் இடத்துக்கு அருகிலேயே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்துக்கு இடம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், இதுவரை மயானம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் என்ற முதியவா் திங்கள்கிழமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலத்தை எடுத்து வந்த கிராம மக்கள் சடலத்துடன் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில், செக்காணூரணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், மயான வசதி விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.