ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படுபவா்கள் சிகிச்சை பெற வசதியாக எப்போதும் தனி வாா்டு உண்டு. தற்போது அரசின் அறிவுறுத்தலை அடுத்து அரசு மருத்துவமனை பிரதான வளாகத்தில் 25 படுக்கைகள் கொண்ட ஒரு வாா்டும், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்தில் 25 படுக்கைகளுடன் ஒரு வாா்டும் தயாா் நிலையில் உள்ளன. இவற்றை 90 படுக்கைகளாக அதிகரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்த வாா்டுகளுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவா் குழுவினரும் தயாா் நிலையில் உள்ளனா். இதனிடையே, சளி, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளுடன் குழந்தைகள் அதிகளவில் சிகிச்சை பெற வருகின்றனா். காய்ச்சல் பாதிப்பை பொறுத்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரையில் தற்போது டெங்கு பாதிப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அரசு மருத்துவமனையில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.