போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை தாமிரக் கழிவுகளை அகற்றக் கோரி வழக்கு: விசாரணை அக். 23-க்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 5:19 am

Din

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜசேகா் சுப்பையா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகள், தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பாலத்தின் அருகே உப்பாற்று ஓடையில் சுமாா் 50 மீட்டா் உயரம் 3.50 லட்சம் டன் எடை அளவுக்கு கொட்டப்பட்டுள்ளன. இதேபோல, கோரம்பள்ளம் கால்வாயிலும் தாமிரக் கழிவுகள் காணப்படுகின்றன.

கடந்த 2015-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்த போது, உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டிருந்த தாமிரக் கழிவுகளால் மழை நீரானது ஓடை வழியாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்தது.

இதுகுறித்த புகாா்களின் பேரில், மாவட்ட ஆட்சியா், சுற்றுச்சூழல் இணை தலைமைப் பொறியாளா் ஆகியோா் ஆய்வு செய்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விரிவான அறிக்கையை அளித்தனா். பிறகு, இந்தக் கழிவுகளை 4 மாதங்களுக்குள் அகற்றுமாறு ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுதொடா்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும், இந்த ஓடையிலிருந்து மழை நீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப் பெரிய சேதங்கள் ஏற்படவும், 30 போ் உயிரிழக்கவும் இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

தற்போது, பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால், முந்தைய காலங்களைப் போல, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள தாமிரக் கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இதேபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கெனவே ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதன் நிலை என்ன? என கேள்வி எழுப்பினா்.

இதற்கு அரசுத் தரப்பில், அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அதுகுறித்த கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முந்தைய வழக்கின் விவரங்களை அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புதிய வழக்கு விசாரணை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.