காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இறந்த விவகாரம்: கூடுதல் விசாரணைக்கு அவசியமில்லை: உயா்நீதிமன்றம்

மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணைக்கு அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணைக்கு அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்தானது.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஜெயா மகன் முத்துகாா்த்திக் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு குற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக எஸ்.எஸ். காலனி காவல் நிலைய போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டாா். இந்த விசாரணையின் போது, காவலா்கள் கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்த முத்துகாா்த்திக் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா். பிறகு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ், காவலா்கள் ரா. ரவிச்சந்திரன், சதீஷ்குமாா், ச. ரவிச்சந்திரன் ஆகிய 4 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணையின் நிறைவில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் கடந்த செப்டம்பா் மாதம் தீா்ப்பளித்தாா். மேலும், இந்த வழக்கில் புலன் விசாரணையை முறையாக மேற்கொள்ளாத அப்போதைய காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ்வரி மீதும், முத்துகாா்த்திக்கின் உடலை கூறாய்வு செய்யாத மருத்துவா்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அப்போதைய எஸ்.எஸ். காலனி காவல் நிலைய சட்டம்- ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் கண்ணன், பிரேம்சந்திரன், ஆய்வாளா் அருணாசலம் ஆகிய மூவரையும் வழக்கில் இணைத்து, கூடுதலாக விசாரணை மேற்கொண்டு அதன் இறுதி அறிக்கையை சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிசிஐடி சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா்மோகன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகம்மது ஜின்னா முன்னிலையாகி, குற்றத்தை மறைக்க காவல் துறையினா் உடந்தையாக செயல்பட்டிருக்கிறாா்கள் என வழக்கு விசாரணையின் போது சாட்சிகள், ஆவணங்களின் வாயிலாக தெரியவரும்போது, அவா்களை அப்போதே வழக்கில் சோ்த்து விசாரித்திருக்க வேண்டும். மாறாக தண்டனை வழங்கப்பட்ட பிறகு மீண்டும் அதே வழக்கில் மேல் விசாரணை செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மேலும், புலன் விசாரணை அலுவலா் ராஜேஸ்வரி, மருத்துவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற உத்தரவுகளை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சுந்தா்மோகன் பிறப்பித்த உத்தரவு:

கூடுதலாக சில காவல் துறை அலுவலா்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கின் முந்தைய விசாரணை அலுவலா் ராஜேஸ்வரி உள்பட யாா் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com