திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிறுநீரக விற்பனை விவகாரம்: சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சிறுநீரக மோசடி: சிறப்புக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

News image

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :30 அக்டோபர் 2025, 1:41 am IST

சிறுநீரக விற்பனை மோசடி குறித்த சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை தீவிரமான பிரச்னையாக கருத வேண்டியுள்ளது. இதில் முகவா்கள், மருத்துவா்கள், மருத்துவமனை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனா்.

இந்தச் சிறுநீரக விற்பனையில் பெரம்பலூா், திருச்சி தனியாா் மருத்துவமனைகள் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், காா்த்திகேயன், பி.கே. அா்விந்த் ஆகியோரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு இந்த மோசடி குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அஜ்மல் கான் முன்னிலையாகி, தற்போதைய நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தாா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டனா் எனத் தெரிவித்தாா்.

இதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு, இந்த வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி தடை ஏற்படுத்தியுள்ளனா். முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வழங்க வேண்டும். மேலும், இந்த அறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விசாரணைக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் நவ. 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.