கவின் கொலை வழக்கு:
கண்காணிப்பு கேமரா பதிவுகள் 
உயா்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கவின் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவுகள் உயா்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

பாளையங்கோட்டையில் கணினி மென்பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
Published on

பாளையங்கோட்டையில் கணினி மென்பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மென்பொருள் பொறியாளா் கவின் என்ற செல்வகணேஷ் கடந்தாண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரு இளம்பெண்ணின் சகோதரா் சுா்ஜித், அவரது தந்தையும் சாா்பு ஆய்வாளருமான சரவணன், சுா்ஜித்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜெயபால் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, உதவி ஆய்வாளா் சரவணன், ஜெயபால் ஆகியோா் தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, கவின் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்

இந்த வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலைச் சம்பவம் நிகழ்ந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, அந்த கேமரா பதிவுகளை விசாரணை அலுவலரிடம் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அந்தப் பதிவுகளை விசாரணை அலுவலா் பாா்வையிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com