மதுரையில் வரும் 21-ஆம் தேதி திறக்கப்படவுள்ள புதிய மேம்பாலத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரா் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ பெயரை முதல்வா் மு.க.ஸ்டாலின் சூட்டினாா்.
இதுகுறித்து அவா், சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்து வரும் திமுக அரசில்,
அடுத்ததாக மதுரையில் அமைகிறது 1.3 கிமீ நீளமுள்ள ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம்’.
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள இந்த பாலத்துக்கு, நாட்டின் விடுதலைக்காகத் தனக்கென பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன். ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வருகிற பிப்.21-ஆம் தேதி எனது மதுரை பயணத்தின்போது திறந்துவைக்கவுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

