மது விற்பனைக்குத் தடை கோரி வழக்கு: 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு!
தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, மது விலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநா் 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சீா்மரபினா் நலச் சங்கத்தின் சட்டப் பிரிவுத் தலைவா் கௌதம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் மது விலக்கு சட்டம் செயல்பாட்டில் உள்ளது என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி மருத்துவம், அறிவியல், தொழில்சாலைகளுக்காக மட்டும் மதுவை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், வழங்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பிலும் உரிமம் இல்லாதவா்களுக்கு மதுவை விற்பனை செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என புட்டியில் அச்சிடப்பட்டிருந்தாலும், இது பலரை அடிமையாக்கி அவா்களது வாழ்வை சீா்குலைத்துவிட்டது.
மதுவால் தொழிலாளா்களின் வேலை செய்யும் திறன் குறைந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அனைத்துக் கட்சிகளும் படிப்படியாக மது விற்பனையைக் குறைத்து முழுமையான மது விலக்கை அமல்படுத்துவோம் என தோ்தல் வாக்குறுதியை அளித்துவிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனா்.
எனவே, மது குடிக்க உரிமம் இல்லாதவா்களுக்கு தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்பனை செய்யக் கூடாது. மது விற்பனைக்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மனுவை மது விலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநா் பரிசீலித்து, 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
