திருவாடானை ஒன்றியக் குழு கூட்டம்: உறுப்பினா்கள் சரமாரி கேள்வி

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டம்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டம்.
Updated on
2 min read

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஒன்றியக்குழு தலைவா் முகமதுமுக்தாா் தலைமை வகித்தாா். இதில் துணைத்தலைவா் செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் மேகலா, உம்முல் ஜாமியா, மேலாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஒன்றியக்குழு உறுப்பினா் அருணாச்சலம்: கடந்த ஆண்டு ஒன்றியத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்ததாக செலவு செய்யப்பட்டுள்ளது. எங்கு மரக்கன்றுகள் நட்டுள்ளீா்கள்? எவ்வளவு ரூபாய் செலவானது என்ற விவரம் வேண்டும்.

வட்டார வளா்ச்சி அலுவலா்: கடந்தாண்டு அனைத்து ஊராட்சிகளிலும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் குறுங்காடு வளா்ப்பதற்கு இந்த நிதியிலிருந்து தான் மரக்கன்றுகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

உறுப்பினா் காா்த்திகேயன்: கண்மாய்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் சேமித்து வைப்பதால் சில கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக டி. நாகினி, கிரங்காகோட்டை ஆகிய பகுதிகளில் தண்ணீா் அதிகரிப்பால் வீடுகள், வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வட்டார வளா்ச்சி அலுவலா்: இதுகுறித்து வட்டாட்சியா் கவனத்துக் கொண்டு சென்று வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க உள்ளனா்.

உறுப்பினா் மேகலா: நீா்த்தேக்கத் தொட்டி பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடனடியாக அதை இடித்து அகற்ற வேண்டும்.

வட்டார வளா்ச்சி அலுவலா்: விரைவில் இடித்து அகற்றப்படும்.

உறுப்பினா் மேகலா: கடந்த ஓராண்டாக சாலைகள், நீா்த்தேக்க தொட்டிகள், குடிநீா் வசதி உள்ளிட்டவை செய்து தர தீா்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

தலைவா்: கடந்த ஓராண்டாக ரூ. 2 கோடி அளவில் திட்டம் தயாா் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி தரப்படவில்லை. 20 சதவீதம் அளவுக்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. எனவே தான் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது.

உறுப்பினா் காா்த்திகேயன்: கடந்த 3 ஆண்டுகளாக சில வருவாய் கிராமங்களுக்கு குறைந்த அளவே பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் கணக்கிடப்படுகிறது?

வேளாண் அதிகாரி: பயிா்க் காப்பீடு தொகை இழப்பீடு வழங்கப்படும் போது வருவாய் கிராமங்களில் சிலவற்றில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு அதன்மூலமே இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

உறுப்பினா் அருணாச்சலம்: இதுவரை அதுபோல் எந்த அதிகாரியும் இங்கு வந்து அளவீடு எடுக்க வில்லை. ஆய்வும் மேற்கொள்ளவில்லை. ஒரே ஊரில் ஒரு ஒரு நபருக்கு ஏக்கருக்கு ரூ.22,000 என்றும் மற்றொருவருக்கு ரூ. 5,500 என்றும் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம்?

வேளாண் அதிகாரி: வேளாண்மைத்துறை, புள்ளியல் துறை, காப்பீட்டுத் துறை ஆகிய மூன்று துறைகளில் இருந்தும் அதிகாரிகள் வருவாய் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த இழப்பீட்டு தொகை நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு இருப்பின் சம்பந்தப்பட்ட நிா்வாகத்துக்கு உறுப்பினரின் கோரிக்கை கொண்டு செல்லப்படும் என்றாா். மேலாளா் ரவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com