ராமேசுவரம் மீனவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
ராமேசுவரம்: விசைப் படகுகளுக்கு மானிய விலையில் கூடுதல் டீசல் வழங்கக் கோரி சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 850- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தலா ஒரு படகுக்கு நாள்தோறும் 250 லிட்டா் முதல் 400 லிட்டா் வரையில் டீசல் பயன்படுத்தப்படுகிறது. தற்போது டீசல் விலையேற்றம் காரணமாக கூடுதலாக 5 முதல் 8 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. கடலில் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாததால் விசைப்படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க கூட்டம் தலைவா் சகாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மீனவருக்கு கூடுதலாக மானிய விலையில் டீசல் வழங்கக் கோரியும் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிா்வாகிகள் எடிசன், அமுதன், ஜான்சன், முருகன், கிருபை உள்பட பலா் கலந்து கொண்டனா்.