திருச்சியில் 3 மணிமண்டபங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
By DIN | Published On : 16th June 2020 11:53 AM | Last Updated : 16th June 2020 11:53 AM | அ+அ அ- |

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகிய மூவருக்குமான மணிமண்டபம் கட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கோ. அபிஷேகபுரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்த மணிமண்டபங்கள் கட்டப்படவுள்ளன. இங்கு, பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகிய மூவருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்படவுள்ளது.
பெரும்பிடு முத்தரையர் மணிண்டபத்தில் நூலகமும் இடம்பெறவுள்ளது. இந்த மணிமண்டபம் ரூ.99.25 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதேபோல, சர் ஏ.டி. பன்னீர் செல்வம் மணிமண்டபம் ரூ.43.40 லட்சத்திலும், தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ரூ.42.69 லட்சத்திலும் கட்டப்படவுள்ளது. இந்த மணிமண்டபங்களுக்கான அடிக்கல்லை சென்னையிலிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைத்தார்.
இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மணிமண்டபம் கோரி கோரிக்கை விடுத்த சமுதாய அமைப்பினர் கலந்து கொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்தபடி மணிமண்டபம் கட்டுவதற்கு ஒரே இடத்தில் இடம் தேர்வு செய்து, பணிகளை தொடங்க தற்போது அடிக்கல் நாட்டியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...