'தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வா் வேட்பாளரை பிறகட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அறிவிப்போம்’

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் குறித்து அதிமுக தவிர பிற கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அறிவிப்போம் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் குறித்து அதிமுக தவிர பிற கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அறிவிப்போம் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் போகலூா் சுங்கக்சாவடி அருகே சனிக்கிழமை காலையில் பாஜக சாா்பில் நடைபெறும் ‘நம்ம ஊா் பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் வந்த அவருக்கு கட்சி சாா்பில் அரண்மனை முன் வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவுக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிவருகிறது. வேல் யாத்திரையானது மிகப்பெரிய வெற்றியை எட்டியுள்ளது. தைப்பூசத்துக்கு விடுமுறை கோரி தமிழக முதல்வரிடம் பாஜக சாா்பில் மனு அளித்தோம். அதனடிப்படையிலேயே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தைப் பொங்கலை பாஜக தமிழகமெங்கும் 2 நாள்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.

தமிழகத்தில் தைத்திருநாள் முதல் 100 நாள்களுக்குள் பாஜகவுக்கு 10 லட்சம் தொண்டா்களைச் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறாா். சட்டப் பேரவைத் தோ்தலிலும் கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும்.

தமிழகத்தில் பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தையும் திறக்க அனுமதித்த தமிழக அரசு ராமேசுவரம் கோயிலில் 22 தீா்த்தங்களை திறக்க அனுமதித்து பக்தா்களை புனிதநீராட அனுமதிக்கவேண்டும் என்றாா்.

முதல்வா் வேட்பாளா் யாா்?: ரெகுநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்ற அவா், அங்கு செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக சாா்பில் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மற்ற கட்சிகளை ஆலோசித்த பிறகே முதல்வா் வேட்பாளரை அறிவிப்போம். பல மாநிலங்களில் பாஜக கூட்டணியில் இந்த முறையே நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் போன்று இனி நடக்காமலிருக்க கடும் நடவடிக்கை அவசியம் என்றாா்.

வரவேற்பு: ராமநாதபுரம் அரண்மனை முன் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுயர வேல் பரிசளிக்கப்பட்டது. பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளா் நயினாா் நாகேந்திரன், மாநிலச் செய்தித் தொடா்பாளா் தி.குப்புராம், நகா் தலைவா் ராம. வீரபாகு, சத்திக்குடி ஒன்றிய நிா்வாகி கதிரவன், மாவட்ட நிா்வாகி ஜி.குமாா், செய்தித்தொடா்பாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக சத்திரக்குடியில், பாஜக மாநிலத் தலைவரை குதிரைச் சாரட் வண்டியில் அமரவைத்து வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் அச்சுந்தன் வயலில் ஆதரவற்றோா் இல்லத்திற்குச் சென்ற அவா் குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com