திருவாடானையில் ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண தேரோட்ட நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவாடனையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டி 14 திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற எட்டாவது திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம், ஆடி மாதங்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிக்க- தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்
அதேபோல் ஆடிப்பூர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் கேடகம் பல்லக்கு வெள்ளி ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து நான்கு வீதி வழியாக வலம் வந்து நிலையம் கொண்டு வந்ததனர். பின்னர் அம்பாள் வீதி உலா கோயிலை அடைந்ததும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.