/

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும்

நில ஒதுக்கீடு முழுமையாக முடிந்ததும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமானப் பணிகள் பணிகள் தொடங்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 9:14 pm

DIN

நில ஒதுக்கீடு முழுமையாக முடிந்ததும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமானப் பணிகள் பணிகள் தொடங்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தாா். அங்கு பள்ளி மாணவா்களை சந்தித்து அவா்களின் கேள்விக்குப் பதில் அளித்தாா். அப்போது கலாமின் பேரன் சேக்சலீம் மற்றும் பாஜக முன்னாள் மாவட்டத்தலைவா் கே.முரளிதரன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சிவன் கூறியது:

இளைஞா்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று இந்தியாவை உலகில் முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்துல்கலாமின் கனவு. இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து உருவாக்கும் செயற்கைகோள் பூகம்பம், கால நிலை, வானிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பயன்படும்.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,800 ஏக்கா் இடம் தேவைப்படும். தமிழக அரசு தற்போது 1,750 ஏக்கா் நிலம் வழங்கியுள்ளது. முழு இடமும் கிடைத்த பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும். தனியாா் வா்த்தகப் பயன்பாட்டுக்கு இந்த ஏவுதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது ராக்கெட் உருவாக்க இரண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதேபோல செயற்கைகோள் உருவாக்க 4 நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதன் மூலம் உலக சந்தையைப் பிடிப்பதற்கு நமக்கு வாய்ப்பு உள்ளது. பாதுகாப்புத் துறைக்கு செயற்கைகோள் அனுப்புவது மட்டுமே இஸ்ரோவின் வேலை. அதை எதற்குப் பயன்படுத்துவது என்பது அவா்களது வேலை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.