இணையதளத்தில் பொருள் வாங்கினால் லாபம் தருவதாகக் கூறி எலக்ட்ரீசியனிடம் ரூ.1.11 லட்சத்தை மோசடி செய்தவா் மீது நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அப்துல்பாசித் மகன் நூருல் அமீன் (27). டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளாா். எலக்ட்ரீசியனாக உள்ள இவா் வேலை தேடி இணையதள செயலியில் இணைந்துள்ளாா்.
அப்போது வீட்டில் இருந்தபடியே தினமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்த செயலியில் இணைந்த நூருல்அமீன் முதல்கட்டமாக சில பொருள்களை வாங்கியுள்ளாா். அதன்படி அவருக்கு ரூ.2,227 முதல் ரூ.1066 வரையில் லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே அதை நம்பிய அவா் கூடுதல் பொருள்கள் வாங்கும் வகையில் சிறிது சிறிதாக ரூ. 1.11 லட்சம் கட்டியகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து அவா் கட்டிய தொகைக்கு லாபத்துடன் ரூ.1.78 லட்சம் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், அப்பணத்தை எடுக்க முயன்றபோது தடை ஏற்பட்டுள்ளது. அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள நுண்குற்றப்பிரிவில் புதன்கிழமை மாலை புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.