சித்தரங்குடி கண்மாய்க்கரையில் சாலை: வனத்துறையிடம் மனு
By DIN | Published On : 30th June 2022 11:44 PM | Last Updated : 30th June 2022 11:44 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்துக்கு சித்திரங்குடி கண்மாய்க்கரை வழியாக சாலை அமைக்க அனுமதிக்குமாறு கிராமத்தினா் வனத்துறையினரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ளது பொந்தம்புளி கிராமம். இக்கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் இணைப்புச் சாலையானது சித்திரங்குடி வழியாகச் செல்கிறது. சித்திரங்குடி கண்மாய் பறவைகள் சரணாலயமாக உள்ளது. ஆகவே கண்மாய் கரையோரம் சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுக்கிறது.
பொந்தம்புளி கிராமத்தினா் வெளியூா்களுடன் தொடா்புகொள்வதற்கு சித்திரங்குடி வழி சாலை மட்டுமே உள்ளது. மொத்தம் 4 கிலோ மீட்டா் தூரமுள்ள சாலையில் 300 மீட்டா் சித்திரங்குடி கண்மாய் கரையோரம் வருகிறது. ஆகவே வனத்துறை அனுமதித்தாலே சாலை அமைக்கமுடியும். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கக் கோரி கிராமத்தினா் போராடி மனு அளித்தும் பயனில்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமை ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள வன உயிரினக் காப்பாளா் அலுவலகம் வந்த சித்திரங்குடி ஊராட்சித் தலைவா் கண்ணன் மற்றும் பொந்தம்புளியைச் சோ்ந்த யாகோபு உள்ளிட்டோா் மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பறவைகள் அச்சரணாலயத்துக்கு வந்து செல்கின்றன. ஆகவே ஆண்டு முழுதும் பயன்படுத்தும் சாலைக்கு அனுமதி மறுப்பது சரியல்ல என்றனா்.