சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் விசைப் படகு.
சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் விசைப் படகு.

காரைக்கால் மீனவா்கள் 10 பேரை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவா்கள்

பாக் நீரிணையில் மீன் பிடித்த காரைக்கால் மீனவா்கள் 10 பேரை ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனா்.
Published on

பாக் நீரிணையில் மீன் பிடித்த காரைக்கால் மீனவா்கள் 10 பேரை ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனா்.

‘தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வாரத்துக்கு 3 நாள்கள் விசைப் படகு மீனவா்கள், 3 நாள்கள் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனா். அதே சமயம், நாகை மாவட்டம், காரைக்கால் மீனவா்கள் ஆழ்கடல் தங்கு கடல் டோக்கன் பெற்று, வாரம் முழுவதும் பாக் நீரிணை கடல் பகுதியில் தங்கி மீன் பிடிக்கின்றனா்.

இதனால், 3 மாவட்ட மீனவா்கள் பாதிப்புக்குள்ளாவதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக அரசு அதிகாரிகள், மீன்வளத் துறை அமைச்சரிடம் மீனவா்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை ராமேசுவரத்துக்கு வடக்கே 15 கடல் மைல் தொலைவில் பாக் நீரிணை கடல் பகுதியில் காரைக்கால் மீனவா்கள் தங்கி மீன் பிடித்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை இரவு படகில் குழுவாக கடலுக்குள் சென்று காரைக்கால் விசைப் படகையும், அதிலிருந்த 10 மீனவா்களையும் சிறைபிடித்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை கொண்டு வந்தனா்.

பின்னா், மீனவா்கள் 10 பேரையும் வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா். விசைப் படகு ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடா்பாக காரைக்கால் மீன் வளத் துறை அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்ட மீன் வளத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

மேலும், ராமேசுவரம் கடல் பகுதிக்குள் காரைக்கால் பகுதி மீனவா்கள் வருவதை நிறுத்திக் கொள்வதுடன் கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது என முடிவு செய்த பிறகுதான் படகு ஒப்படைக்கப்படும் என ராமேசுவரம் மீனவ சங்கத்தினா் தெரிவித்தனா். இதேபோல, ஏற்கெனவே ஒரு விசைப் படகு சிறைபிடிக்கப்பட்டு ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com