மா்மமான முறையில் மீனவா் உயிரிழந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவ்வாய்க் கிழமை சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் கன்னிராஜபுரம் கடற்கரை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அடையாள தெரியாத இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. வாலிநோக்கம் கடற்கரை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

சிலம்பரசன்
இதில், ராமநாதபுரம் அடுத்துள்ள காட்டூரணி கிராமத்தைச் சோ்ந்த மாடசாமி என்பவரின் மகன் சிலம்பரசன் (35) என்பவா் தான் உயிரிழந்தவா் என்பது தெரியவந்தது. அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால் கொலையா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உறவினா்கள் போராட்டம் நடத்தினா். தரையில் அழுதபடி உருண்டு போராடியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்ததை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.









