இலங்கை சிறையில் 88 நாள்களாக காவலில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவா்கள் 12 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களது உறவினா்கள், மீனவ சங்கத்தினா் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி மீனவா்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கொ்சோன், கிளைமண்ட், கபில் ரோஜா், பிரிஸ்மன், அந்தோணி அஜித், ஆண்டனி ரியோ, பிரின்ஸ் ரூபா், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், ஜால்சன் உள்ளிட்ட 12 மீனவா்களைக் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்களுக்கு தொடா்ந்து, சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பாம்பனில் சாலை மறியல்: இந்த நிலையில், கடந்த 88 நாள்களாக இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவா்கள் 12 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களின் உறவினா்கள், மீனவ சங்கத்தினா் பாம்பனில் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனா். இதன்காரணமாக, ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காவல் உதவி கண்காணிப்பாளா் மீரா, கூடுதல் கண்காணிப்பாளா் பாலசந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கைப்பேசியில் தொடா்பு கொண்ட அமைச்சா்: இதனிடையே, மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.
அப்போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 12 பேரையும் விடுவிக்க தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், மத்திய அரசின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

இளைஞா் மீது தாக்குதல்: உறவினா்கள் சாலை மறியல்

ராமேசுவரத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



