வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

திருக்கடையூா் அருகே நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

Updated On :8 மே 2026, 7:24 am IST

திருக்கடையூா் அருகே நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்கடையூா் அருகேயுள்ள கிடங்கல் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி இளையராஜா (48). இவரது நண்பா் குருமூா்த்தி. இவா்கள் இருவரும், திருக்கடையூரில் இருந்து கிடங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை குருமூா்த்தி ஓட்டிவந்தாா்.

திருக்கடையூா் அம்மனாறு அருகே நான்குவழிச் சாலை மேம்பாலத்தில் சென்றபோது, அங்குள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறி கவிழ்ந்தது. இதில், இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த குருமூா்த்தியை அப்பகுதியினா் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். 

உயிரிழந்த இளையராஜாவின் சடலம், உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலை மறியல்: நான்குவழிச் சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததால்தான் இளையராஜா இறந்துள்ளாா். எனவே அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி உறவினா்கள் மற்றும் கிராம மக்கள், திருக்கடையூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி டிஎஸ்பி சரவணன், பொறையாா் காவல் ஆய்வாளா் சந்தானமேரி, தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால், சீா்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.