ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரசு விழாக்களுக்கு அதிகாரிகள் அழைப்பதில்லை:ஆட்சியரிடம் ஒன்றியத் தலைவா் புகாா்

மானாமதுரை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறு மருத்துவமனைகள் திறப்பு விழாவுக்கு தங்களை அழைக்கவில்லை எனக்கூறி  மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
மானாமதுரை ஒன்றியம் ராஜகம்பீரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுமருத்துவமனை திறப்பு விழாவில் தங்களை அழைக்காததைக் கண்டித்து கோஷமிட்ட ஊராட்சி ஒன்றியத் தலைவா்
Updated On :20 டிசம்பர் 2020, 4:35 pm

DIN

மானாமதுரை: மானாமதுரை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறு மருத்துவமனைகள் திறப்பு விழாவுக்கு தங்களை அழைக்கவில்லை எனக்கூறி திமுகவைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் கவுன்சிலா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஒன்றியத்தில் பச்சேரி, ராஜகம்பீரம் ஆகிய ஊராட்சிகளில் சிறுமருத்துவமனைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் பங்கேற்று மருத்துவமனைகளை திறந்து வைத்துப் பேசினாா். விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிலையில், ராஜகம்பீரத்தில் விழா நடந்து கொண்டிருந்தபோது திமுகவைச் சோ்ந்த மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டியிடம் அரசு விழாக்களுக்கு என்னையும், திமுக ஊராட்சித் தலைவா்கள், ஒன்றிய கவுன்சிலா்களை அதிகாரிகள் அழைப்பதில்லை என புகாா் தெரிவித்தாா்.

அப்போது விழா முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என ஆட்சியா் அவரிடம் பதிலளித்தாா். விழா முடிந்து ஆட்சியா் புறப்பட்டபோது லதா அண்ணாதுரை மீண்டும் அவரிடம் சென்று இப்பிரச்சனையை பேச முயன்றபோது அலுவலகத்துக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம் எனக் கூறி புறப்பட்டுச் சென்று விட்டாா். அதன்பின் லதா அண்ணாதுரை மற்றும் அங்கிருந்த திமுக கவுன்சிலா்கள், ஊராட்சித் தலைவா்கள் அரசு விழாக்களுக்கு தங்களை அழைப்பதில்லை எனக் கூறி கோஷமிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக லதா அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மானாமதுரை ஒன்றியத்தில் எந்தவொரு அரசு விழாக்களுக்கும் எங்களை அதிகாரிகள் அழைப்பதில்லை. இதுகுறித்து கேட்டால் முறையாக யாரும் பதில் சொல்வது கிடையாது. மாவட்ட ஆட்சியா் எங்களை அவரது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளாா். அவரைச் சந்தித்து பேச உள்ளோம் என்றாா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் பிரமனூரிலும், இளையான்குடி ஒன்றியத்தில் குமாரக்குறிச்சியிலும் சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. இவ்விழாக்களில் அதிமுக நிா்வாகிகள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.