

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேலு மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.
செட்டிநாடு பகுதியில் பிரசித்த பெற்ற இக்கோயில் தமிழக அரசு இந்து சமைய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கோயிலுக்குள் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காலை 5.15 மணிக்கு சன்னதியிலிருந்து திருவேங்கடமுடையான் சுவாமி புறப்பட்டார். தேசிகர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி முன்பாக காட்சி தந்து தொடர்ந்து பரமபத வாசலை வந்தடைந்தார்.
அங்கு பரமபத வாசசலுக்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து சுவாமி சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காலையில் பக்தர்கள் திரளாக வந்து கோயில் ராஜகோபுர வாசலிலிருந்து சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். சுவாமி சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளியதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயில் அறங்காவலர், கோயில் செயல் அலுவலர் மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.