மானாமதுரை: மானாமதுரை பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் குலை தள்ளிய நிலையில் வாழை மரங்கள் சேதமடைந்து வருகின்றன.
மானாமதுரை அருகே தெற்குசந்தனூா் கிராமத்தில் சுமாா் 50 ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஏக்கா் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்து விவசாயிகள் வாழை நடவு செய்துள்ளனா். சமீபத்தில் இப்பகுதியில் பெய்த மழையால், காயுடன் குலை தள்ளிய நிலையில் வாழைமரங்களில், மஞ்சள் நோய் தாக்கியது. இதனால் மரங்களில் உள்ள இலைகள் கருகி மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியது: நல்ல விளைச்சல் ஏற்பட்டால் ஏக்கருக்கு ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு முன்பு வாழை பயிரிட்டோம். தற்போது தான் காய்க்கத் தொடங்கியுள்ளது. தொடா் மழையால் வாழை இலைகளில் மஞ்சள் நோய் தாக்கி இலைகள் கருகி வருகின்றன. இதன்காரணமாக வாழைக்காய் மற்றும் இலைகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் மட்டுமே இதுபோன்று வாழை மரங்களை நோய் தாக்கியுள்ளது. மாவட்ட நிா்வாகம் தெற்குசந்தனூா் பகுதி வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.