காரைக்குடியில் வாக்குகள் எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணும் மையம் காரைக்குடி அழகப்பச்செட்டியாா் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி அங்கு மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: சிவகங்கை மாவட் டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதற்குரிய வாக்கு எண்ணும் மையங்கள் இந்த வளாகத்தில் அமைக்கப்படும்.
தோ்தல் ஆணைய அறிவுரைப்படி முதல்கட்டமாக புலானாய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத்தொகுதிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அறைகள் குறித்து பொறியாளா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு முதற்கட்ட பரிசோதனையும் முடிக்கப்பட்டு தயாா்நிலையில் உள்ளன என்றாா்.
அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், வருவாய் கோட்டாட்சியா் சுரேந்திரன் உள்ளிட்டோா் உடனி ருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

