மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் வருடாந்திர பங்குனித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. காசிக்கு நிகராக கருதப்படும் திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பங்குனித் திருவிழா நடைப்பெற்றது.
பங்குனித் திருவிழாவின் தொடக்கமாக நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் சிவனடியார்கள் கயிலாய வாத்தியங்கள் முழங்க பகல் 11.40 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது.
அதன்பின் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு கலச நீரால் அபிஷேகம் நடத்தினர். பின்னர் கொடிமரத்துக்கு தர்ப்பைப் புல், மலர்மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அங்கு எழுந்தருளியிருந்த புஷ்பவனேஸ்வரர் சுவாமிக்கும், சௌந்தரநாயகி அம்மனுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது தினமும் இரவு அம்மனும், சுவாமியும் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வருதல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 16 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், மறுநாள் 17 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி உத்ஸவசாந்தி நிகழ்ச்சியுடன் இந்தாண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.