மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றுக்குள் மணல் குவாரிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மானாமதுரையில் பார்த்திபனூர் மதகு அணையில் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் வைகையாற்றுக்குள் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், பிரதான குடிநீர் திட்டங்கள் என ஏராளமான குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்க தமிழக அரசின் பொதுப்பணித் துறை நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து குடிநீர்த் திட்டங்களை பாதுகாக்கும் வகையில் மணல் குவாரிகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரை அருகேயுள்ள பார்த்தபனூர் மதகு அணையிலிருந்து மதுரை மாவட்டம் விரகனூர் மதகு அணை வரை காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மானாமதுரை அருகேயுள்ள பார்த்திபனூர் மதகு அணையில் இரு சக்கர வாகனத்துடன் திரளான விவசாயிகள் கூடினர். ஆனால் காவல்துறையினர் இந்த பேரணிக்கு அனுமதி கொடுக்க மறுத்தனர். அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் ஆகியோருடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடந்து அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் பார்த்திபனூர் மதகு அணை முன்பு குவாரிகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பேசிய காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு கூட்டமைப்பு மாநில நிர்வாகி அர்ச்சுனன் செய்தியாளரிடம் கூறியதாவது:
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் குடிநீர்த் திட்டங்களை பாதிக்கும் வகையில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளது. மணல் குவாரிகள் அமைக்கப்பட்டால் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்பட்டு விவசாய கிணறுகள் வறண்டு விடும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே இப்பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்க கூடாது. மீறி குவாரிகள் அமைக்கப்பட்டால் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார். போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் இராம. முருகன், பி.அய்யனார் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.