காரைக்குடி: காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கார் எரிந்த விபத்தில், காரில் வந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் குப்புசாமி. குப்புசாமியும் அவரது உறவினர்கள் இருவரும் காரில் வெளியூர் சென்றுவிட்டு காரைக்குடி திரும்பியுள்ளனர். கார் தேவர் சிலை அருகே வரும் போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. குப்புசாமி காரிலிருந்து இறங்க முயன்றுள்ளார்.
அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. காரின் முன்பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் நடந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.