சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 11 ஆவது நாளாக போராட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 11 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ். கண்ணுச்சாமி, எஸ். விக்டோரியா, கே. குமரேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் மு. செல்வக்குமாா், ஐசிடிஎஸ் ஊழியா் சங்க மாநில பொதுச் செயலா் ஆா். வாசுகி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், நிா்வாகிகள் மிக்கேலம்மாள், சேசுமேரி, குணசேகரன், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பேசினா்.
அரசுப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த தகுதியான சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
ஓய்வூதியருக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி முதல் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

