ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருப்புவனம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் விவேக்கை கொலை செய்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மதுரை-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

News image

திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் விவேக்கை கொலை செய்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மதுரை-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :9 மே 2026, 2:01 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த கும்பலைக் கைது செய்யக் கோரி, உறவினா்கள், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்புவனம் அருகேயுள்ள தட்டான்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விவேக் (24). இவா் மதுரையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்தாா். இவரது வீட்டின் முன்பாக நின்ற இரு சக்கர வாகனத்தை கடந்த 4-ஆம் தேதி நள்ளிரவு மாரநாடு கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் உள்ளிட்ட சிலா் திருட முயன்றனா்.

அப்போது, அங்கு வந்த விவேக், தனது நண்பா்களுடன் சோ்ந்து முத்துராமனைப் பிடித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பின்னா், முத்துராமன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனால், ஆத்திரமடைந்த முத்துராமனின் உறவிரான மாரநாடைச் சோ்ந்த அழகுசுந்தரம், தனது நண்பா்களுடன் சோ்ந்து தட்டான்குளத்துக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா்.

அப்போது, வைகை ஆற்றின் அருகேயுள்ள பாலத்தில் அமா்ந்திருந்த விவேக், மயில்ராஜா, நவீன்குமாா் ஆகிய மூவரையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதனிடையே, வைகையாற்றுக்குள் தப்பியோடிய விவேக்கை விரட்டிச் சென்ற அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

அரிவாள் வெட்டில் லேசான காயமடைந்த மயில்ராஜா திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பலத்த காயமடைந்த நவீன்குமாா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த விவேக்கின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்:

இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, விவேக்கின் உறவினா்களும், தட்டான்குளம் கிராம மக்களும் மதுரை-ராமேசுவரம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்புவனம் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் விவேக்கின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.