வைகை அணையில் ஆக்கிரமிப்பு: அழியும் மீன்வளம்

வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதியை ஆக்கிரமித்து  மேற்கொள்ளப்படும் விவசாயத்தால் அணை நீர் மாசடைவதோடு, அணையில் உள்ள மீன் இனங்கள் அழிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதியை ஆக்கிரமித்து  மேற்கொள்ளப்படும் விவசாயத்தால் அணை நீர் மாசடைவதோடு, அணையில் உள்ள மீன் இனங்கள் அழிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
   வைகை அணையின் நீர்தேக்கப் பகுதி சுமார் 22 ச.கி.மீ. கொண்டதாகும்.  அணையைச் சுற்றிலும் 20-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் வைகை அணைக்கு நீர்வரத்தும் அதிகமாக இல்லை. இதனால் அணையில் நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் அணையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அணையில் முருங்கை, சாம்பார் வெள்ளரி, வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைப் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களுக்கு பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்களையும் இடுகின்றனர். மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது மண்ணில் கலந்துள்ள நச்சுத்தன்மை அணையின் நீரில் கலந்து விடுகிறது. மீன் வளத்துறையின் மூலம் அணையில் ரோகு, கட்லா, மிருகால் போன்ற மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட  நாள்கள் இடைவெளியில் மீனவர் சங்க உறுப்பினர்கள் மூலம் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மீன்கள் தலா 20 முதல் 30 கிலோ வரை கடந்த காலங்களில்  பிடித்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மட்டுமே மீன் கிடைக்கிறது.  வைகை அணையின் மீன்வளம் குறைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.   நீர்த்தேக்கப் பகுதியை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் நீரில் கலப்பதால் மீன் இனம் அழிந்து வருவதாக மீன் பிடிப்போர்  புகார் கூறுகின்றனர். அதேபோல் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஊராட்சி,  பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் வைகையாற்றில் வெளியேற்றுவதால் அந்த கழிவுநீரும் வைகை அணையை வந்தடைகிறது. இதனாலும் அணையின் நீர் மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறியது: வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள் நீர்மட்டம் உயரும்போது வெளியேறி விடுகின்றனர். நீர்மட்டம் குறைந்த பின் மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனர். இவர்கள் பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


மாசு கட்டுப்பாட்டு வாரியம்  ஆய்வு செய்யுமா?
  தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் திண்டுக்கல்லில் செயல்பட்டு வந்தபோது, தேனி மாவட்ட நீர்நிலைகளின் மாசு குறித்து அறிய முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வந்தனர். இப்போது, மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் தேனியில் செயல்பட்டு வருகிறது. எனவே,  மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினரும் அணையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com