தேனி மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி

தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் மருத்துவர், ஆய்வாளர் உள்ளிட்ட
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் மருத்துவர், ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் பற்றாக்குறையால், கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில்  விவசாயிகள் காளை, எருது, பசு, ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட விலங்குகளை வளர்த்து வருகின்றனர். கேரள மாநில எல்லை அருகே அமைந்துள்ள இப்பகுதியில் கால்நடைகள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. 
இம்மாவட்டத்தில் பெரியகுளம், போடி, தேனி ஆகிய மூன்று நகராட்சி பகுதிகளில் மட்டும் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட  இதர ஊர்களில் 33 கால்நடை மருந்தகங்கள் அமைந்துள்ளன. தேனி கால்நடை மருத்துவமனையில் மட்டுமே அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. 
கால்நடை மருந்தகங்களில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை உதவியாளர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பல மருந்தகங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலையே உள்ளது. க.புதுப்பட்டி கால்நடை மருந்தகத்தில், மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் என பணியாளர்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளிலும் சில கால்நடை மருந்தகங்களில், இதே நிலை நிலவுவதாக விவசாயிகள் கூறினர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள் பெறமுடியாமல் கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 
இம்மாவட்டத்தில் இருந்து அதிகளவில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும்.  
இதனால் தமிழக, கேரள எல்லையில் லோயர்கேம்ப், போடி ஆகிய இடங்களில் வெக்கை நோய் தடுப்பு மையங்கள் செயல்பட்டு வந்தன. கேரளாவுக்கு செல்லும் கால்நடைகள் இங்கு பரிசோதிக்கப்படும்.  இந்த மையங்களும்  நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளது. இதனால் தொற்று நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. இதனால் தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் கால்நடை மருந்தகங்களில் காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடம் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி கால்நடை மற்றும் மலை மாடுகள் வளர்க்கும் விவசாயி ஏ.அஜ்மல்கான் கூறியது: கால்நடைகளுக்கான நோய்களை விவசாயிகள் கண்டறிந்து, சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும் போது, மருத்துவர்கள் இல்லை என்றால் வேதனைக்கு ஆளாகின்றனர். அதனால் போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியது: தேனி மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதனால் மருத்துவர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com