உத்தமபாளையம் அருகே விபத்து 2 பேர் பலி: இருவர் படுகாயம்
By DIN | Published On : 04th August 2019 05:03 AM | Last Updated : 04th August 2019 05:03 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சனிக்கிழமை தனியார் பேருந்து, 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
கம்பத்திலிருந்து தேனி நோக்கி தனியார் பேருந்து க.புதுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது, கோசேந்திர ஓடை அருகே எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது தனியார்பேருந்து நேருக்கு நேராக மோதி நின்றது.
பேருந்து திடீரென பிரேக் போட்டதால், அதில் இருந்த பேருந்து பணியாளர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் விஜயன் (23) பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே சென்று சாலையில் விழுந்தார். இதில் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியில், கணவர் சம்பவயிடத்திலேயே பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் கண்மாய் மேலத் தெருவைச்சேர்ந்த சுப்பிரமணி மகன் கதிர்வேல் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் தம்பதியரின் முழு விவரம் தெரியாத நிலையில் இருசக்கர வாகனப்பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்து தேனி மாவட்டம் குமணன்தொழுவைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் முத்துவை கைது செய்து விசாரித்து வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...