நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: ஒருவர் கைது
By DIN | Published On : 22nd March 2019 07:05 AM | Last Updated : 22nd March 2019 07:05 AM | அ+அ அ- |

தேனியில் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
க.விலக்கு பகுதியைச் சேர்ந்த பொன்னையா மகன் ஜெயக்கொடி. இவரது மனைவி அமராவதி, மகன் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரபு, மருமகள் மீனா. இவர்கள் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தேனி, அரண்மனைப்புதூர், உசிலம்பட்டி அருகே வின்னகுடி, ஆரியபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரிடம் மொத்தம் ரூ.23 லட்சம் பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் இருந்து வந்துள்ளனர்.
இது குறித்து தேனி, கே.ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த பாக்கியம் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஜெயக்கொடி, அமராவதி, பிரபு, மீனா ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து ஜெயக்கொடியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...