தேனி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மே 23-இல் கூடுதல் பாதுகாப்பு
By DIN | Published On : 19th May 2019 03:40 AM | Last Updated : 19th May 2019 03:40 AM | அ+அ அ- |

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள மக்களவை தொகுதி, இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மே 23-ஆம் தேதி கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறினார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் கூறியது: கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தற்போது மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்னைகள் எழ வாய்ப்பு உள்ளது என்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 8 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 24 காவல் ஆய்வாளர்கள், 79 சார்பு ஆய்வாளர்கள், 10 விடியோ பதிவாளர்கள், 650 காவலர்கள், 100 ஆயுதப்படை பிரிவு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையம் முன்பு வாகனம் நிறுத்துமிடம் மற்றும் போக்குவரத்து காண்காணிப்பு பணியில் ஊர் காவல் படையினர் 150 பேர் ஈடுபடுகின்றனர். இது தவிர, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவைச் சேர்ந்த தலா 60 பேர் கொண்ட 3 குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் துப்பாக்கி ஏந்திய 26 துணை ராணுவப்படை வீரர்கள், சிறப்பு காவல் படை வீரர்கள் 60 பேர், ஆயுதப் படை காவலர்கள் 40 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்றார்.