குச்சனூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
By DIN | Published On : 26th May 2019 12:43 AM | Last Updated : 26th May 2019 12:43 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு கராணமாக குடிநீர் வீணாகி சாக்கடையில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குச்சனூரில் 12 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக இங்குள்ள முல்லைப் பெரியாற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் இப்பகுதி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதற்காக சங்கராபுரம் சாலை, மார்க்கையன்கோட்டை சாலை உள்ளிட்ட 3 இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன.
இந்நிலையில், சங்கராபுரம் சாலையிலுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும்குடிநீர் குழாயில் ஏற்பட்ட
உடைப்பு காரணமாக பல நாள்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்த தண்ணீர் அருகிலுள்ள சாக்கடை நீருடன் கலப்பதால் குடிநீரிலும் சாக்கடை நீர் கலக்கிறது. இதன் காரணமாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பல இடங்களில் குடிநீர் பஞ்சத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரை தடுத்து நிறுத்த குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.