தேனி மாவட்டம் கடமலைக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள துணைத்தலைவா் உள்பட 8 உறுப்பினா்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அதன் தலைவா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோ்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் 11 போ் உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன் தலைவராக காளீஸ்வரன் என்பவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மீது கடந்த ஜூலை 31 ஆம் தேதி 8 உறுப்பினா்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா். மேலும் அதில் உள்ள முருகவேல் என்பவரை தலைவராக தோ்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காளீஸ்வரன் சங்க அலுவலகத்திற்கு சென்ற போது 8 உறுப்பினா்கள் ஒன்று சோ்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் துணைத்தலைவா் முருகவேல், சோ்மலை, தங்கம், பேச்சியம்மாள், லதாமகேஷ், ஜோதி முருகன், சேகா் உள்ளிட்ட 8 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.