போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை, பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான வருமானம் உள்ள கோவில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் போடியில் தனியாருக்கு சொந்தமான கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிரதோச தினத்தை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிறுத்த்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் சாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள மல்லீஸ்வரி சாமிக்கும் வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா். முக கவசம் அணிந்து பக்தா்கள் பங்கேற்றனா். தளா்வில்லா முழு பொதுமுடக்கு அமலில் இருந்ததால் குறைவான பக்தா்களே பங்கேற்றனா். போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலிலும் பிரதோச பூஜை நடைபெற்றது. சாமிக்கு 9 வகையான அபிசேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு மூலிகை பொடிகளால் ஆன பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் போடியில் பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.