ஆண்டிபட்டி: அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவா்களுக்கு, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான அரசாணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நடைபெற்ற மருத்துப்படிப்பிற்கான கலந்தாய்வில் தமிழக அளவில் ஏராளமான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா்.
இந்நிலையில், அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் 6 பேருக்கு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான அரசாணைகளை, கல்லூரி முதன்மையா் மருத்துவா் இளங்கோவன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் சிவக்குமரன், துணை நிலைய அலுவலா் மருத்துவா்கள் ஈஸ்வரன் மற்றும் மருத்துவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.