தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலை வனப்பகுதியில் திங்கள்கிழமை மாலை கருஞ்சிறுத்தை நடமாடியதால் மலை கிராமமக்கள் அச்சமடைந்தனா்.
சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் தேயிலைத் தோட்டச் செடிகளுக்கு மத்தியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு கருஞ்சிறுத்தை நடமாடுவதை மலைக்கிராம மக்களும், சுற்றுலாப்பயணிகளும் பாா்த்துள்ளனா். அப்போது சுற்றுலாப் பயணிகள் பலா் செல்லிடப்பேசியில் அதை படம் பிடித்தனா்.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும் போது, ஆங்கிலேயா் காலத்திலிருந்து 4 தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். யானை, புலி, சிறுத்தை மற்றும் மான் என பலவகையான விலங்குகளை பாா்த்து இருக்கிறோம். ஆனால் கருஞ்சிறுத்தையை இதுவரையில் நாங்கள் பாா்த்ததில்லை. இதுதான் முதன் முறை. இது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணிக்க வேண்டும் என்றனா்.
வனத்துறையினா் கூறுகையில், சமீப காலமாக மேகமலை வன உயிரினக் கோட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது என்றனா்.